நாளை கூடுகிறது தமிழக சட்டசபை! தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமனம்!
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்றனர். 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சி இன்று மலர்ந்துள்ளது. புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் நாளை (மே 11) கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவதற்கும், 234 தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கும் தற்காலிக சபாநாயகர் (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழா
சபாநாயகர் பதவியேற்பு
புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கும் தற்காலிக சபாநாயகர் (Pro-term Speaker) ஒருவரை ஆளுநர் நியமித்துள்ளார். மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள திரு. கருப்பையா தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை காலை சட்டசபை கூடியதும், மற்ற எம்.எல்.ஏக்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
கூட்டத் தொடர்
நாளை எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு
இன்று முதலமைச்சர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், மீதமுள்ள அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நாளை நடைபெறும் கூட்டத்தில் பதவியேற்க உள்ளனர். புதிய உறுப்பினர்களின் பதவியேற்பிற்குப் பிறகு, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலப்பரீட்சை
பெரும்பான்மை நிரூபிப்பு
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுத்துள்ள உத்தரவின்படி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு வருகிற மே 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவெக-விற்குத் தனித்து 108 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 120 இடங்களுடன் விஜய் தனது பெரும்பான்மையைச் சுலபமாக நிரூபிப்பார் எனக் கருதப்படுகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், நாளை கூடவுள்ள சட்டமன்றக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் திமுக மற்றும் அதிமுக-வின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை அறிய அரசியல் விமர்சகர்கள் ஆவலாக உள்ளனர்.