
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 169 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த 2015 இல் பழனி என்பவரின் மனைவி பவித்ரா மாயமான புகாரில், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்ற இளைஞரை பள்ளிகொண்டா காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாகச் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
வன்முறை
உறவினர்கள் வன்முறை
இதனைத் தொடர்ந்து, ஷமீல் அகமதுவின் உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், கடைகள், மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 71 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் முன்னாள் ஆம்பூர் எம்எல்ஏ அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 22 நபர்களுக்கும், அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்குத் தலா ₹10 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ₹1 லட்சமும் நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.