தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்
கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்தது. இதனைத்தொடர்ந்து ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு மற்றும் தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்வழக்கினை முடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி.,அருணா ஜெகதீசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?என்று தமிழக அரசு விளக்கமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
டிசம்பர் 11ம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ள நீதிபதிகள்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(நவ.,17)மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், விசாரணை ஆணைய அறிக்கையினை ஏற்ற அரசு, அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 வருவாய்துறை அதிகாரிகள், 17 காவல்துறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 21 பேருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை துவங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், 'அந்த 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்னென்ன?' 'இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களது பங்களிப்பு என்ன? உள்ளிட்டவை குறித்து அடுத்த விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என கூறி, டிசம்பர் 11ம் தேதி வழக்கின் விசாரணையினை ஒத்திவைத்தனர்.