தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சியின் போது பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் இயங்கும் 16 உறுப்பு கல்லூரிகளுள் 11 கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழி பாடப்பிரிவுகள் செயல்பட துவங்கியது. இந்நிலையில் இதனை தற்காலிகமாக ரத்து செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பானது அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படப்போவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.