தமிழக வானிலை நிலவரம்: தென் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு! வெயில் குறையுமா? முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஒருபுறம் வெயில் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
மழை
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
மார்ச் 13 (இன்று): தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 14 & 15: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 17: தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 18 & 19: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில்
வெயில் நிலவரம் எப்படி?
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரு தினங்கள்: இன்று மற்றும் நாளை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும். மாற்றம்: மார்ச் 15 முதல் 17 வரை மழை மேகங்கள் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடக் குறைய வாய்ப்புள்ளது. இது மக்களுக்குச் சற்றே நிம்மதி தரும் செய்தியாகும். சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். தற்போது கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை. எனவே, மீனவர்கள் வழக்கம் போலக் கடலுக்குச் செல்லலாம்.