'தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்': முதலமைச்சர் ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரித்த அவர், அந்த சட்டம் மக்களை பிளவுபடுத்துக்கூடியது என்றும் எந்த பயனும் இல்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், குடியுரிமை சட்டத்தை(சிஏஏ) அவசர அவசரமாக அமல்படுத்தும் மத்திய பாஜக ஆட்சியைக் கண்டித்த முதல்வர் ஸ்டாலின், சிஏஏ மற்றும் அதன் விதிகள் அரசியலமைப்பிற்கு.எதிரானது என்றார். "இந்திய மக்களிடையே பிளவுகளை உருவாக்க மட்டுமே இந்த சட்டம் வழி வகுக்கும். CAA சட்டத்தால் எந்தப் பயனும் நன்மையும் ஏற்படப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்றது; இது ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. " என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிரானது CAA': மு.க.ஸ்டாலின்
எனவே, "தமிழகத்தில் சிஏஏவை அமல்படுத்த தமிழக அரசு எந்த வகையிலும் வாய்ப்பளிக்காது" என்று அவர் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் உறுதியளித்துள்ளார். பன்மைத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மை சமூகங்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிரானது CAA என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழ் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவருமான தளபதி விஜய், குடியுரிமை சட்டம் 2019ஐ அமல்படுத்திய மத்திய அரசிற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "நாட்டின் அனைத்து குடிமக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சூழலில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 CAA) போன்ற எந்தவொரு சட்டத்தையும் அமல்படுத்துவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்" என்று நடிகர் விஜய் கூறியிருந்தார்.