நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் நாளைய தினமும் (ஆகஸ்ட் 5), அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்பட உள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இது என்பதால், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பெண்களைக் கவரும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டம், பால் கொள்முதல் அளவை உயர்த்துதல், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு உருவாக்கங்கள் போன்ற முக்கிய முடிவுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள்
'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு திட்டம்
அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டமான 'வெற்றி தமிழகம்' என்ற இலக்கின் கீழ் பல புதிய வளர்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள்: சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி.
கல்வி மற்றும் நிதியுதவி: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில பிணையின்றி (without collateral) ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கும் வசதி.
தொழில்நுட்பக் கல்வி: மாநிலத்தில் நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைத்தல்.
கடந்த ஜூன் 19 முதல் 23 வரை நடைபெற்ற ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டத்தொடருக்குப் பிறகு, புதிய பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன.