வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(அக் 1) ஒரு மணி நேரம் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பிரபல ஃபிட்னஸ் இன்ப்ளுஎன்சர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து, பிரதமர் மோடி துப்புரவு பணியில் ஈடுபட்டார். துப்புரவு பணியுடன் சேர்த்து உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இன்று, நமது தேசம் தூய்மையில் கவனம் செலுத்தும் போது, அங்கித் பையன்புரியாவும் நானும் அதையே செய்தோம்! தூய்மையுடன், நாங்கள் உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வைக் எடுத்துரைப்பதற்காக இதை செய்தோம்." என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.
துப்புரவு பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள்
பிரதமர் மோடியைத் தவிர, மத்திய அமைச்சர்கள் உட்பட பல பாஜக தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்திலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா டெல்லியிலும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். சமீபத்தில், பிரதமர் மோடியின் பிரபல ரேடியோ நிகழ்ச்சியான 'மனதின் குரல்' என்பதில் பிரதமர் இது குறித்து பேசி இருந்தார். அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், அக்டோபர் 1 ஆம் தேதி அனைத்து குடிமக்களும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு மணிநேரம் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.