Page Loader
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை- விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

எழுதியவர் Srinath r
Nov 09, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்கள், தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விரிப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றவாளக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரியும், குற்ற வழக்குகளை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க கோரியும், பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களுக்கு சில உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

2nd card

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை தீவிர படுத்தவேண்டும்

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் சிறப்பு அமர்வுகள் அமைத்து, அட்வகேட் ஜெனரல் உதவியை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை, விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை தாமாக முன்வந்து, முன்னுரிமை வழங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை, உயர்நீதிமன்றம் வரையறை படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3rd card

பொதுவான முறை வகுப்பது கடினம்- உச்சநீதிமன்றம்

எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும், பொதுவான முறையை வகுப்பது கடினம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனால், மாநில உயர்நீதிமன்றங்கள் இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரண்டு வருடம் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெரும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி உடனடியாக பறிபோகும். மேலும், தண்டனை முடிந்த பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 6 ஆண்டுகள் தடையை வாழ்நாள் தடையாக மாற்ற, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.