LOADING...
பத்மஸ்ரீ விருது பெறும் சமூக ஆர்வலர் சுநீதா காட்போலே: பழங்குடியின பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய சாதனை
பழங்குடியினர் வாழ்வை உயர்த்தியதற்காக பத்மஸ்ரீ விருது பெறும் சமூக ஆர்வலர் சுநீதா காட்போலே

பத்மஸ்ரீ விருது பெறும் சமூக ஆர்வலர் சுநீதா காட்போலே: பழங்குடியின பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2026
02:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குச் சமூக சேவைத் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் மூத்த சமூக ஆர்வலர் சுநீதா காட்போலே, வரும் மே 25 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்த உயரிய விருதை அதிகாரப்பூர்வமாகப் பெறுகிறார். மாவோயிஸ்ட் பாதிப்புகள் நிறைந்த பஸ்தார் மற்றும் அபுஜ்மாட் வனப்பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பழங்குடியின பெண்களின் சுகாதாரம், விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்காகத் தங்களின் வாழ்நாளையே அர்ப்பணித்துப் பணியாற்றியதற்காக இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய கூடுதல் விபரங்கள் இங்கே:-

தியாகப் பயணம்

கணவர் "டாக்டர் பையா" உடன் இணைந்த 37 ஆண்டுகால தியாகப் பயணம்

சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்ற ஸ்ரீமதி சுநீதா காட்போலே, மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தங்களின் கணவரான புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ராமச்சந்திர காட்போலேயின் உன்னத லட்சியங்களுக்கு முழுத் துணையாக நின்றார். கடந்த 1990 ஆம் ஆண்டு தங்களின் சொகுசான நகர்ப்புற வாழ்க்கையைத் துறந்து, கணவருடன் இணைந்து சத்தீஸ்கரின் பின்தங்கிய பஸ்தார் காடுகளுக்குக் குடிபெயர்ந்தார். போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் கூட இல்லாத கிராமங்களுக்குத் தங்களின் கணவருடன் சேர்ந்து பல கிலோமீட்டர் தூரம் காடுகளுக்குள் நடந்து சென்று, கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங்குடியின மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.

சுகாதாரப் புரட்சி

பழங்குடியின பெண்களிடையே சுகாதாரப் புரட்சி மற்றும் பாதுகாப்பான பிரசவ விழிப்புணர்வு

பாரம்பரிய மூடநம்பிக்கைகள் மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வந்த பழங்குடியின பெண்களின் மத்தியில் சுநீதா காட்போலே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு காலப் பாதுகாப்பு, முறையான பிரசவ காலப் பரிசோதனைகள், தனிநபர் சுகாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகள் குறித்துப் பெண்களுக்குப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார். இவரின் தொடர் முயற்சியால், பழங்குடியினப் பெண்கள் தங்களின் உடல்நலக் குறைபாடுகளைத் தைரியமாக வெளிப்படுத்தி, முறையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெறத் தொடங்கினர்.

Advertisement

ஊட்டச்சத்து திட்டம்

'மாஸ்' (MAAS) ஊட்டச்சத்து திட்டம் மூலம் அனிமியா மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்

காட்போலே தம்பதியர் தங்களின் வனவாசி விகாஸ் சமிதி மற்றும் ட்ரஸ்ட் ஃபார் ஹெல்த் ஆகிய அமைப்புகளின் மூலம் பல்வேறு நற்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாகச் சுநீதா காட்போலே, குழந்தைகளிடம் காணப்படும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகையைப் போக்குவதற்காக 'மாஸ்' (MAAS) என்ற சிறப்புத் திட்டத்தை உருவாக்கினார். உள்ளூர் பகுதிகளில் கிடைக்கக்கூடிய சத்தான உணவுகளைக் கொண்டே குழந்தைகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது என்று தாய்மார்களுக்குப் பயிற்சி அளித்தார். எந்தவொரு உலக விளம்பரமும் இன்றி, காடுகளுக்குள் வாழும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய இவரின் தூய்மையான சமூகத் தொண்டிற்காகவே, தற்பொழுது இவருக்கும் இவரின் கணவருக்கும் கூட்டு விருதாகப் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விருதுகள் முயற்சி

#PeoplesPadma என்பது என்ன?

அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்ம விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.

Advertisement