நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'
விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது 25 தரையிறக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் அவசர நிதியைப் பயன்படுத்த இருப்பதாக இன்று(மே 3) தெரிவித்துள்ளது. இந்தியாவின் இன்னொரு விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்', நேற்று, திவால் செய்வதற்கு தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான சேவையும் நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரையிறக்கப்பட்ட தனது விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர ரூ.400 கோடி வரை நிதி திரட்டி இருப்பதாக கூறியுள்ளது.
இது வரவிருக்கும் பயண சீசனில் அதிக லாபம் ஈட்ட உதவும்: அஜய் சிங்
அது போக, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க வணிகங்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திலிருந்து (ECLGS) வழங்கப்படும் நிதியையும் பெற இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. "தரையிறக்கப்பட்ட எங்கள் விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். விமான நிறுவனத்தால் பெறப்படும் ECLGS நிதியுதவியின் பெரும்பகுதி இதற்காகவே பயன்படுத்தப்படும். இது வரவிருக்கும் பயண சீசனில் அதிக லாபம் ஈட்டவும், அதிகப் பயன்பெறவும் உதவும்." என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.