ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, சட்டப்படி செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான 23 மனுக்கள் மீது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் உச்ச நீதிமன்றம் தொடர் விசாரணையை நடத்தியது. இந்நிலையில் இன்று, இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு 3 விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இருப்பினும் இவர்கள் அனைவரும், பிரிவு 370 ரத்து தொடர்பான விவகாரத்தில் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிவு 370 தற்காலிக நடவடிக்கை- தலைமை நீதிபதி
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சமஸ்தான அரசாக இருந்து இந்தியாவுடன் இணைந்துள்ளது. தற்போது இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒரு தற்காலிக ஏற்பாடு என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பிரிவு 370-ஐ ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே இருந்ததாகவும், தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இந்த தீர்ப்பில் கூறியுள்ளார். இதனால் 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து நீக்க அவசர சட்டம் செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவரின் ஆட்சி தொடர்பான விவகாரங்கள் இடம்பெறாததால், அது குறித்து முடிவு எடுக்க முடியாது எனவும் நீதிபதிகள் . தீர்ப்பளித்துள்ளனர்