ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! செப்டம்பர் 19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்
செய்தி முன்னோட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 19 ஆம் தேதி விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார். முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க மத்திய அரசு அளித்த வழிகாட்டுதலின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும்.
முகாம் நேரம்
முகாம் நடைபெறும் நேரம் மற்றும் விடுபட்ட பகுதிகளின் விவரம்
எனினும், இடைத்தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் மட்டும் இந்த சிறப்பு முகாம் நடைபெறாது என உணவுப்பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இதுவரை ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைரேகைப் பதிவை செய்யாமல் விடுபட்டுள்ள அட்டைதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று தங்களது விரல் ரேகைப் பதிவை முடிப்பதன் மூலம், தடையின்றித் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும்.