Page Loader
ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்
ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

எழுதியவர் Nivetha P
Mar 09, 2023
07:25 pm

செய்தி முன்னோட்டம்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடியில் வைகை நகரை சேர்ந்த சிகாமணி (44), இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஆவார். இவரும் இவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமது(36) என்பவரும் இந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை காரில் ஏற்றி அழைத்து சென்று மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். இவர்களோடு புது நகரை சேர்ந்த பிரபாகரனும்(42) இணைந்து பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

மகளிர் அமைப்புகள்

வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி போராட்டம்

அவர்கள் அளித்த புகாரின் பேரில், மேற்கூறிய மூவரையும், இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி சிகாமணி நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றும் கயல்விழி(45), அவருடன் பணியாற்றும் அன்னலட்சுமி என்னும் உமா(34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மகளிர் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டம் நடத்தினர். இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.