மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு
இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்று(நவ.,17) மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. 2024 நாடாளுமன்றம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த 5 மாநில தேர்தலானது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் முன்னதாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் கடந்த 7ம்.,தேதி நடந்து முடிந்தநிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் தற்போது நடக்கிறது. இருமாநிலங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் 1.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
700 மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
இதனை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 17,032 வாக்குச்சாவடிகள் பதற்றமிக்கது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பு பணியில் 700 மத்திய ஆயுதப்படையினர் மற்றும் 2 லட்சம் மாநில காவல்துறை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநில தேர்தலில் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், சத்தீஸ்கரில் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதே போல் சத்தீஸ்கரில் 18,833 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த 2ம் கட்ட வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். இன்று நடக்கும் இந்த இருமாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படவுள்ளது.