தெற்கு பிளாக்கிற்கு விடை, இனி 'சேவா தீர்த்' தான்! பிரதமர் அலுவலகத்தின் புதிய முகவரி இதுதான்
செய்தி முன்னோட்டம்
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட 'சேவா தீர்த்' வளாகத்திற்கு இன்று மாற்றப்பட்டது. டெல்லி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1:30 மணிக்கு திறந்து வைத்தார். நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளும் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன.
சிறப்பம்சங்கள்
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
இந்த வளாகம் 4-ஸ்டார் 'கிரிஹா' (GRIHA) தரத்திற்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர் சேமிப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காகிதமில்லா நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் முழுமையான டிஜிட்டல் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் ரூ.100 நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடுவார் என இந்தியா டுடே செய்தி கூறுகிறது. இதுவரை பிரதமர் அலுவலகம் இயங்கி வந்த வரலாற்று சிறப்புமிக்க தெற்கு பிளாக் மற்றும் வடக்கு பிளாக் கட்டடங்கள், இனி 'யுகே யுகீன் பாரத்' என்ற பெயரில் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன.