Loading...
கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உலக வர்த்தகம் சாத்தியம்! பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உலக வர்த்தகம் சாத்தியம்! பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
07:48 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய வர்த்தகம் சீராக நடைபெற வேண்டும் என்றால் கடல்வழிப் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், விநியோக சங்கிலி தடங்கலின்றி திறந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சர்வதேசக் கடல் வழிப் பாதைகளின் சுதந்திரமான இயக்கம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா எப்போதும் வலுவான ஆதரவை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரம்

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி

பின்னடைவுகள் மற்றும் சர்வதேசப் பதற்றங்களுக்கு மத்தியிலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதாரம் அடைந்துள்ள அபார வளர்ச்சியைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ஜிடிபி வளர்ச்சி சுமார் 2.5 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் மொத்த ஜிடிபி கிட்டத்தட்ட 4.5 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது.

இது உலகப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சியை விட இருமடங்கு வேகமாகும் என்றும், உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் பிரிக்ஸ் நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியா

இந்தியாவின் பொருளாதார மீள்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா மீள்தன்மை, புதுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றித் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளதாக மோடி தெரிவித்தார்.

ஆற்றல் துறை முதல் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் விநியோக சங்கிலிகள் பல்வகைப்படுத்தப்பட்டு நம்பிக்கையானதாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும், நாட்டில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருவதுடன், கப்பல் கட்டுதல், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற மூலோபாயத் துறைகளில் புதிய திறன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பெண் தொழில்முனைவோர்

பெண் தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலத் தொலைநோக்கு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பை முதன்மையாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரிக்ஸ் பெண்கள் வர்த்தகக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 200 பெண் தொழில் தலைவர்கள் பங்கேற்றதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

எளிய ஸ்டார்ட்அப் முயற்சிகள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை பிரிக்ஸ் நாடுகளில் உருவாகி வரும் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய தீர்வுகளுக்குப் பெரும் வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT