சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி
தென்காசியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கார் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர். புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல், மனோஜ், சுப்ரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகியோர் வாடகைக்கு ஒரு காரை எடுத்து குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்றிருக்கின்றனர். குளித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அவர்கள் சென்ற கார் மீது சிமென்ட் ஏற்றி வந்த ஒரு லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். விபத்தின் போது கார் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டதால், ஜேசிபி கொண்டு வரப்பட்டு பலத்த முயற்சிக்கு பின் லாரியின் அடியில் இருந்த கார் மற்றும் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் 17-28 வயதுடையவர்கள் ஆவர்.