நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று(டிச 13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள், புகை குண்டுகளை வீசினர். இந்த அத்துமீறலை 6 பேர் கொண்ட ஒரு குழு, நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நான்கு ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த அத்துமீறலை மிக நுணுக்கமாக அவர்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஆறாவது நபர் தலைமறைவாக உள்ளார்
சமூக வலைதளம் மூலம் கூட்டு சேர்ந்த அந்த 6 பேரும், ஊடுருவலுக்கு முன்னதாக நாடாளுமன்ற கட்டிடத்தை உளவு பார்த்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று, மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகிய 2 நபர்களை தவிர, அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குண்டுகளை வீசி போராட்டம் நடத்தி கொண்டிருந்த அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆகிய மேலும் இருவரும் கைது செய்யட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர், குருகிராமில் உள்ள லலித் ஜாவின் இல்லத்தில் தங்கியிருந்தனராம். அதன் மூலம், ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு பிடிபட்ட நிலையில், ஆறாவது நபர் தலைமறைவாக உள்ளார்.