பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் கேரளா மாநிலத்தில் இந்த புதிய வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி அங்கு கடந்த நவம்பரில் 479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில், இம்மாத துவக்கத்தின் 8 நாட்களிலேயே 825 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓர் உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தது. இந்தியளவில் கொரோனாவால் பாதிப்படைவோரில் 90% கேரளாவை சேர்ந்தோர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் அம்மாநில அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இன்று ஆலோசனை
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி, கேரளாவில் நேற்று(டிச.,19)ஒரேநாளில் மட்டும் 292 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே அம்மாநில சுகாதாரத் துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இதுவரை 2,041 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் கொரோனா 341 பேருக்கு உறுதிச்செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இன்று(டிச.,20)இணை-அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.