நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள்
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சியாயா என்ற சிறுத்தைக்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று(மார்-29) தெரிவித்தார். சிறுத்தை குட்டிகளின் புகைப்படம் மற்றும் வீடியோவை அமைச்சர் யாதவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த ஆண்டு செப்டம்பரில், நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோவுக்கு சில சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 17 செப்டம்பர் 2022அன்று இந்தியாவிற்கு கொண்டவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்றிற்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று அமைச்சர் யாதவ் கூறியுள்ளார்.