Page Loader
மகாராஷ்டிராவில் நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை தந்தை அடித்ததில் மரணம்
நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்தே கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை தந்தை அடித்ததில் மரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 23, 2025
08:46 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 17 வயது சிறுமி சாதனா போன்ஸ்லே, நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தனது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார். 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் 92.60% மதிப்பெண்கள் பெற்ற சாதனா, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) தயாராகி வந்தார். தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் சாதனா சமீபத்தில் ஒரு பயிற்சித் தேர்வில் மோசமாகச் செயல்பட்டுள்ளார். பள்ளி ஆசிரியரான அவரது தந்தை தோண்டிராம் போன்ஸ்லே, இதனால் கோபமடைந்து தனது மகளை ஒரு குச்சியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்பு

மாணவி சாதனா உயிரிழப்பு

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, சாதனாவை சாங்லியில் உள்ள உஷாகல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பெறுவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தனது மகளின் தேர்வு மதிப்பெண்களுக்கு கணவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். அவர் தற்போது ஜூன் 24 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடந்து வருகிறது.