LOADING...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2025
01:12 pm

செய்தி முன்னோட்டம்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் சதி என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்ட ஏழு பொதுநல மனுக்களை நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சிபிஐக்கு மாற்ற முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதேவேளையில், காவல்துறையின் போதுமான ஏற்பாடுகள் இல்லாததே உயிரிழப்பிற்குக் காரணம் என்ற மனுதாரர் தரப்பின் வாதத்தை அரசுத் தரப்பு மறுத்தது.

காவல்துறை

காவல்துறையினரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம்

நீதிமன்றம் காவல்துறையினருக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியது. "மாநில நெடுஞ்சாலையில் எப்படிப் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது? குடிநீர், சுகாதார வசதிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டதா? என்று சட்டம்-ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?" என்று கேள்விகளை எழுப்பியது. மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக, விஜய் மற்றும் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.