சர்க்கரை ஆலை ஊழியர் டூ பத்மஸ்ரீ விருது: இந்தியாவின் மிகப்பெரிய சொந்த நூலகத்தை உருவாக்கிய அன்கே கவுடா யார்?
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயதான ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் அன்கே கவுடா, தனது ஐந்து தசாப்த கால விடாமுயற்சியால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்து, இந்தியாவின் மிகப்பெரிய தனிநபர் நூலகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். கல்வி மற்றும் இலக்கிய சேவைக்காக மத்திய அரசு இவருக்கு அண்மையில் நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இப்போது, மே 25 அன்று நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவிற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த புத்தக மனிதரின் பயணத்தைப் பார்ப்போம்.
பயணம்
வறுமை டூ புத்தக காதல்: அன்கே கவுடாவின் பயணம்
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அன்கே கவுடாவுக்கு, சிறுவயதில் புத்தகங்கள் படிப்பது ஒரு எட்டாக்கனியாக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை காரணமாகப் பேருந்து நடத்துனராக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து, மாலை நேரக் கல்லூரி மூலம் பி.ஏ மற்றும் அஞ்சல் வழி மூலம் கன்னட மொழியில் எம்.ஏ பட்டங்களைப் பெற்றார். பின்னர் பாண்டவபுராவில் உள்ள சர்க்கரை ஆலையில் 'டைம்கீப்பராக' பணியில் சேர்ந்தார். தனது 33 ஆண்டுகால பணி வாழ்க்கையில், மாதாந்திர சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை அவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தினார். வருமானத்தைப் பெருக்கப் பசு மாடுகளை வளர்த்து பால் விற்பது, இன்சூரன்ஸ் ஏஜென்ட் போன்ற வேலைகளையும் செய்தார்.
நூலகம்
கவுடாடாவின் உழைப்பால் உருவான 'புஸ்தக மனே'
ஆரம்பத்தில் வீட்டில் உள்ள பெரிய இரும்புப் பெட்டிகளில் புத்தகங்களைச் சேகரித்து வந்த அன்கே கவுடாவின் சேகரிப்பு 50,000-ஐத் தாண்டிய போது வீட்டில் இடமில்லாமல் போனது. இவரது அரிய முயற்சியைக் கண்டு வியந்த தொழிலதிபர் ஹரி கோடே என்பவர், பாண்டவபுராவில் 15,800 சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட நூலகக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி இதற்கான கூடுதல் கட்டடங்களை விரிவாக்கம் செய்ய நிதி உதவினார். இந்த நூலகத்திற்கு 'புஸ்தக மனே'(புத்தக வீடு) என்று பெயரிடப்பட்டது. இங்குள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை எவரும் இலவசமாகப் படித்துச் செல்லலாம். இந்த நூலகத்தில் எந்த ஒரு தொழில்முறை நூலகரும் இல்லை. இருப்பினும், எந்தப் புத்தகம் எங்குள்ளது என்பதை அன்கே கவுடா துல்லியமாகக் கூறிவிடுவார்.
முக்கிய சேகரிப்புகள்
நூலகத்தின் முக்கிய சேகரிப்புகள்
மொத்த புத்தகங்கள்- 20 லட்சத்திற்கும் மேல் பல்வேறு மொழிகளின் அகராதிகள்- 5,000-க்கும் மேல் அரிய வெளிநாட்டுப் புத்தகங்கள்- சுமார் 5 லட்சம் சர்வதேச மற்றும் கன்னட இதழ்கள்- 37,500-க்கும் மேல் மகாத்மா காந்தி & பகவத் கீதை பற்றிய நூல்கள்- தலா 2,500 புத்தகங்கள் அரிய வரலாற்று ஆவணங்கள்- 1832ஆம் ஆண்டு வரையிலான கையெழுத்துப் பிரதிகள்
விருது
தேடி வந்த விருதுகள்
தனது நூலகத்திற்காக மைசூரில் இருந்த சொந்த நிலத்தையும், தனது ஓய்வூதியப் பணத்தையும் முழுமையாகத் தியாகம் செய்த அன்கே கவுடாவைத் தேடிப் பல விருதுகள் வந்துள்ளன. 2009 - கன்னட புத்தக ஆணையத்தின் ஜி.பி. ராஜரத்தினம் இலக்கிய விருது 2011 - ஆல்வாஸ் நுடி-சிறி விருது 2014 - கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது 2016 - லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records) 2026 - பத்மஸ்ரீ விருது (அறியப்படாத சாதனையாளர்கள் பிரிவு)
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#PadmaAwards2026 | #PeoplesPadma
— AIR News Chennai (@AIRNews_Chennai) May 21, 2026
புகழ்பெற்ற நூலார்வலரும், அறிவுப் பாதுகாவலருமான கர்நாடகாவை சேர்ந்த திரு. அங்கேகவுடா, இலக்கியங்களை பாதுகாப்பதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக #PadmaShri விருது வழங்கிச் கௌரவிக்கப்டவுள்ளார்.@HMOIndia @PadmaAwards @airnewsalerts pic.twitter.com/S91Z5BgelP
விருதுகள் முயற்சி
#PeoplesPadma என்பது என்ன?
அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்மா விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.