Page Loader
ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

எழுதியவர் Sindhuja SM
Jun 12, 2024
10:51 am

செய்தி முன்னோட்டம்

இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரின் ஓவியத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர். மேலும், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பயங்கரவாதியின் ஓவியம் தயாரிக்கப்பட்டதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. "சமீபத்தில் பூனி பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியின் இருப்பிடம் குறித்து பயனுள்ள தகவல் அளிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரியாசி போலீசார் அறிவித்துள்ளனர்" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா 

பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷிவ் கோரி கோவிலில் இருந்து போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமத்திற்கு அருகே இருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற 53 இருக்கைகள் கொண்ட பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற அந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான முயற்சிகள் செவ்வாயன்று நடந்து வருகின்றன.