மனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியாவில் பசுக்களின் கோமியங்களை குடிப்பது நல்லது என்று ஒரு தரப்பினரும், குடிக்க கூடாது என்று ஓர் தரப்பினரும் பல காலமாக கூறிவருகிறார்கள். இது குறித்த தெளிவான செய்தி எங்கும் இல்லை. இச்சூழலில் தான் IVRI எனப்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தற்போது இது குறித்த ஆய்வினை நடத்தி அதற்கான அறிக்கையை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் பசுக்களின் கோமியம் குடிப்பது குறித்த முக்கிய எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கோமியத்தை குடிக்க வேண்டாம். அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதனால் அது மனித நுகர்வுக்கு ஏற்றது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்
தொற்று நோயியல் துறையின் தலைவர் போஜ் ராஜ் சிங் தலைமையில் மாணவர்கள் குழு இந்த விரிவான ஆய்வினை நடத்தியுள்ளார்கள். இவர்கள் பசுக்கள், காளைகள் மற்றும் எருமைகளின் சிறுநீரினை ஆய்வு செய்ததில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை குடித்தால் கடுமையான வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும். இதனை ஏற்படுத்தக்கூடிய Escherichia Coil போன்ற கடுமையான பாக்டீரியாக்கள் இதில் நிறைந்துள்ளதாம். இந்த ஆய்வு முடிவுகள் ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போஜ் ராஜ் சிங் கூறுகையில், இந்த ஆய்வினை மேற்கொள்ள 73 சிறுநீர் மாதிரிகளை நாங்கள் எடுத்தோம். அதே நேரம் பசுவுடன் ஒப்பிடுகையில் எருமையின் சிறுநீரில் ஆன்டிபாக்டீரியாக்கள் உள்ளது என்று கூறியுள்ளார்.