60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே
செய்தி முன்னோட்டம்
கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இன்று, வெள்ளிக்கிழமை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
புது டெல்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா நிலையங்களில் ஏற்கனவே பைலட் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
கட்டுப்பாடு விவரங்கள்
கூட்ட நெரிசலை நிர்வகிக்க, இந்த நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்படும், பயணிகள் தங்கள் ரயில் வரும்போது மட்டுமே நடைமேடைகளுக்கு வர அனுமதிக்கப்படும்.
இந்த நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகளை மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்படாத நுழைவுப் புள்ளிகளுக்கும் சீல் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நிலையங்களிலும் 12 மீட்டர் (40 அடி) மற்றும் 6 மீட்டர் (20 அடி) அகலம் கொண்ட புதிய நடை மேம்பாலம்கள் (FOBs) நிறுவப்படும்.
மகா கும்பமேளாவின் போது 'திறமையாக' நிரூபிக்கப்பட்ட இந்த அகலமான நடை மேம்பாலம்கள், சிறந்த கூட்ட நடமாட்டத்திற்கான சாய்வுப் பாதைகளை உள்ளடக்கியிருக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
ரயில் நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கேமராக்களை நிறுவுவதன் மூலம் கண்காணிப்பை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முக்கிய ரயில் நிலையங்களில் வார் ரூம்கள் அமைக்கப்படும்.
அங்கே அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கூட்ட மேலாண்மை முயற்சிகளை ஒருங்கிணைப்பார்கள்.
ஒவ்வொரு பெரிய நிலையத்திலும் ஒரு நிலைய இயக்குநர் இருப்பார், அவர்களில் ஒரு மூத்த அதிகாரி நிதி முடிவுகளை அந்த இடத்திலேயே எடுக்க அதிகாரம் பெற்றவர்.
நிலையத் திறன் மற்றும் ரயில் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்தும் அதிகாரமும் நிலைய இயக்குநருக்கு இருக்கும்.