Loading...
ஹசீனா பேசியதற்கு நாங்கள் பொறுப்பல்ல! பங்களாதேஷ் எதிர்ப்பிற்கு இந்தியாவின் பதிலடி; FCRA விவகாரத்திலும் அமெரிக்காவிற்கு பதிலடி
ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்புக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை என வெளியுறவுத் துறை விளக்கம்

ஹசீனா பேசியதற்கு நாங்கள் பொறுப்பல்ல! பங்களாதேஷ் எதிர்ப்பிற்கு இந்தியாவின் பதிலடி; FCRA விவகாரத்திலும் அமெரிக்காவிற்கு பதிலடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
06:57 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய அரசிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த நிகழ்வு முற்றிலும் ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அதில் ஹசீனா பேசிய கருத்துக்களுக்கு குறிப்பாகத் தற்போதைய பங்களாதேஷ் அரசு குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு இந்திய அரசு எவ்விதத்திலும் ஆதரவோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

எஃப்சிஆர்ஏ சட்டம்

எஃப்சிஆர்ஏ சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனப் பதிலடி

இந்தியாவின் அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டப் பிரிவில் (FCRA) கொண்டுவரப்படும் சட்டத் திருத்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

"சட்டம் இயற்றுவது இந்தியாவின் முற்றிலும் உள்நாட்டு விவகாரமாகும்.

இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே சட்டங்களை இயற்றவும் திருத்தவும் முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது.

அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதிகளைக் கட்டுப்படுத்த சொந்த சட்டங்களைக் கொண்டுள்ளன." என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

கண்காணிப்பு

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த கண்காணிப்பு

தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் புதிய ராணுவக் கூட்டு நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சோமாலியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் இந்தியா தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது.

இத்தகைய மாற்றங்கள் பிராந்தியப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துத் தேவைப்படும் சூழலில் கூடுதல் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் வெளியுறவுத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

மாலுமிகளுக்கு பாதுகாப்பு

வளைகுடா பகுதியில் இந்தியக் கப்பல் மாலுமிகளுக்கு முழுப் பாதுகாப்பு உறுதியளிப்பு

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், சர்வதேச கடல் வழிகளில் இந்தியக் கொடியுடன் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அரசு உறுதியளித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணிநேரமும் இயங்கும் உதவி மையங்களை நடத்தி வருகின்றன.

சர்வதேசக் கடல் பாதைகளில் தடையற்ற வர்த்தகப் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்றும், வணிகக் கப்பல்கள், பொதுமக்கள் மற்றும் மாலுமிகளைக் இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக அனைத்துத் தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT