சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது.
வரும் நடப்பாண்டில் ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸினை 'ஸ்மார்ட் கார்டு'ஆக வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிகள் திறப்பதையொட்டி, மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் கொடுப்பது, பள்ளிகளை தூய்மை படுத்தும் பணிகள் முதலியன செய்யப்பட்டு வருகிறது.
பஸ் பாஸ்
நடத்துநர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் கேட்காமல் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறியுள்ளதாவது, கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸினை காண்பித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணத்தினை மேற்கொள்ளலாம்.
பள்ளி-கல்லூரி அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அல்லது சீருடை அணிந்திருக்கும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் பேருந்து நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா புதிய பஸ் பாஸினை விநியோகம் செய்யும் கால அளவினை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.