மருத்துவ உபகரணங்களின் லேபிள்களில் ஸ்டெரிலைசேஷன் லைசென்ஸ் எண் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை கிருமி நீக்கம் செய்யும் பணிகளை வேறு வெளிநிறுவனங்களுக்கு வழங்கி இருந்தால், அப்பணியை செய்த ஆலையின் செல்லுபடியாகும் உரிம எண்ணை உபகரணங்களின் லேபிள்களில் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தம்
மருத்துவ சாதன விதிகள் 2017ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம்
இதற்காக மத்திய அரசு மருத்துவ சாதனங்கள் விதிகள், 2017ன் விதி 44ல் முறைப்படியான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு இதற்கான அரசிதழ் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களில் கிருமித் தொற்றுகள் ஏதுமின்றி நோயாளிகளுக்கு பாதுகாப்பாக பயன்படுவதை உறுதி செய்ய கிருமி நீக்க செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், ஒருவேளை உபகரணங்களில் ஏதேனும் தரம் சார்ந்த பிரச்சினைகள் எழுந்தால், அதற்கு காரணமான கிருமி நீக்க ஆலையை எளிதில் கண்டறிய முடியும்.
கவலை
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கவலை
மத்திய அரசின் இந்த புதிய லேபிளிங் விதிமுறையால் தங்களின் உற்பத்திச் செலவு மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படும் சுமை அதிகரிக்கும் என இந்திய மருத்துவ உபகரணத் தொழில் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத், சர்வதேச ஏற்றுமதியின் போது அவசரத் தேவைகளுக்காக வேறு கிருமி நீக்க ஆலைகளுக்கு உற்பத்தியை மாற்றும் போது, லேபிள்களை மாற்றுவதில் காலதாமதம் ஏற்படும் என்றும், இதனால் ஏற்றுமதிப் பொருட்கள் 2 முதல் 3 வாரங்கள் வரை தேங்கி நிற்கும் ஆபத்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிப்பு
சர்வதேச அளவில் இல்லாத புதிய விதியால் ஏற்றுமதி பாதிப்பு
உலகளவில் உள்ள எந்தவொரு நாட்டின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்புகளும், கிருமி நீக்கம் செய்யும் துணை ஒப்பந்ததாரர்களின் உரிம எண்களை உபகரணப் பாக்கெட்டுகளில் அச்சிட வற்புறுத்துவதில்லை என்று தொழில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வழக்கமாக தயாரிப்பு நிறுவனங்களே அனைத்துப் பேட்ச்-லெவல் ஆவணங்களையும் பராமரித்து தரத்திற்குப் பொறுப்பேற்கும் சூழலில், இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றம், சர்வதேசச் சந்தையில் இந்திய உற்பத்தியாளர்களின் போட்டித் திறனைக் குறைக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.