Page Loader
'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

எழுதியவர் Nivetha P
Jan 28, 2023
03:37 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. இதில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமானநிலைய முனையத்தில், விமானத்திற்கு அழைத்து செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஏற்றாமல் இந்த விமானம் கிளம்பி டெல்லிக்கு சென்றுள்ளது. பயணிகளை ஏற்றாமல் அவர்களது உடமைகளை மட்டும் ஏற்றிக்கொண்டு இந்த விமானம் சென்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து மன்னிப்பு கோரிய 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அந்த விமானத்தில் இருந்து அனைத்து பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 55 பயணிகள் அடுத்த ஓராண்டிற்கு இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் விமான நிறுவனம் அறிவித்தது.

அறிக்கை வெளியீடு

ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி

இந்நிலையில், பயணிகளை விட்டு சென்ற விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகளை ஏற்றி செல்வது குறித்து முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதே போல், ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணிகள் சிறுநீர் கழித்த விவகாரத்தில் மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.