
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக அவதூறு செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது விமானிகள் கூட்டமைப்பு
செய்தி முன்னோட்டம்
ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து பொது மன்னிப்பு கேட்டு, தனது அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. இந்த ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஆதாரமற்றது மற்றும் அவதூறானது என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ விசாரணையிலிருந்து உண்மைகளை அந்த ஊடகங்கள் தவறாக சித்தரித்ததாக குற்றம் சாட்டியது. விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரில் உள்ள இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன்னிலிருந்து கட்ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டன.
அறிக்கை
அறிக்கையில் விமானிகள் மீது குற்றம் சுமத்தவில்லை
சுவிட்சுகள் கட்ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறினாலும், அறிக்கை எந்தக் குற்றத்தையும் சுமத்தவில்லை அல்லது உள்நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கூறவில்லை. இதுபோன்ற நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ், கேப்டன் வேண்டுமென்றே எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியிருக்கலாம் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய விமானிகள் கூட்டமைப்பு இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது. இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் கேப்டன் சிஎஸ் ரந்தாவா, ஊடகங்கள் அறிக்கையை தவறாகப் புரிந்து கொண்டதாகவும், சட்டரீதியான விளைவுகள் குறித்து எச்சரித்ததாகவும் கூறினார். ALPA-I உட்பட பல இந்திய விமானி சங்கங்களும் ஊடக அறிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
அவதூறு
இந்திய விமானப் போக்குவரத்து குறித்து அவதூறு
இந்திய விமானப் போக்குவரத்து மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் ஊகங்களைத் தவிர்க்க உலகளாவிய ஊடகங்களை இந்திய விமானிகளின் சங்கங்கள் வலியுறுத்தின. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான விபத்து புலனாய்வுப் பணியகமும், இந்த ஊடக அறிக்கைகளை விமர்சித்துள்ளது. தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், சர்வதேச தரநிலைகளின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும் வலியுறுத்தியது. இதற்கிடையே, இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்து, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) சமீபத்திய ஊடக அறிக்கைகளை ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறி நிராகரித்துள்ளது. மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் விசாரணைக்கு அதன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.