ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் பாஸ்போர்ட் மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பாஸ்போர்ட் (திருத்தப்பட்ட) விதிகள், 2026ன் கீழ் இந்த புதிய கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு, வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில்தான் பாஸ்போர்ட் கட்டணங்கள் கடைசியாக மாற்றியமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டணம்
சாதாரண மற்றும் தட்கல் புதிய கட்டண விவரங்கள்
புதிய திருத்தப்பட்ட விதிகளின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் புதிய பாஸ்போர்ட் பெற அல்லது தங்களது பழைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க இனி கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும். இதன்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், அவசரமாகப் பாஸ்போர்ட் பெறும் தட்கல் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் இனி 3,500 ரூபாய்க்குப் பதிலாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டிற்கு சாதாரணப் பிரிவில் 3,500 ரூபாயும், தட்கல் பிரிவில் 6,000 ரூபாயும் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைந்த பாஸ்போர்ட்
தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குக் கூடுதல் கட்டணம்
பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டாலோ அல்லது அது கடுமையான சேதமடைந்தாலோ, அதற்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, மாற்று 36 பக்க பாஸ்போர்ட்டிற்குச் சாதாரணப் பிரிவில் 5,000 ரூபாயும் மற்றும் தட்கல் பிரிவில் 7,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல, 60 பக்க பாஸ்போர்ட் மாற்று சேவைக்கு சாதாரணப் பிரிவில் 6,000 ரூபாயும் மற்றும் தட்கல் பிரிவில் 8,500 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,750 ரூபாயாகவும், தட்கல் கட்டணம் 4,250 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதர கட்டணங்கள்
பிசிசி மற்றும் இதர தூதரக சேவைகளுக்கான புதிய கட்டணங்கள்
பாஸ்போர்ட் மட்டுமின்றி, வெளிநாட்டு வேலை மற்றும் விசாக்களுக்கு அவசியமான போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ், பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ் போன்ற இதர துணை சேவைகளுக்கான கட்டணமும் தற்பொழுது இந்தியாவில் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த சேவைகளைப் பெற விரும்புவோருக்கு 40 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறையானது, நீங்கள் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கான அப்பாயிண்ட்மென்ட்டை எப்போது முன்பதிவு செய்திருந்தாலும் சரி, ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு இணையதளத்தில் இறுதி விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் அனைத்துப் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.