வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறைவு: யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைத்தன?
இந்தியாவில் இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளுள் 542 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதள தரவுகளின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுள் திமுக 22 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், விசிக 2 இடங்களையும், கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், மதிமுக 1 இடங்களையும், மற்றும் முஸ்லீம் லீக் 1 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. முடிவுகளின்படி, பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கத் தயாராகிவிட்டார். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்க தயாராகிவிட்டது.
பாஜகவுக்கு விழுந்த பெரும் அடி
பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க அதற்கு 272 இடங்கள் தேவை. எனினும், ஆந்திரா மற்றும் பீகாரில் முறையே 16 மற்றும் 12 இடங்களை வென்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி(TDP) மற்றும் நிதிஷ் குமாரின் JD(U) கட்சி ஆகியவற்றின் உதவியோடு பாஜக ஆட்சியமைக்க உள்ளது. கூட்டணி கட்சிகளில் பிளவு ஏற்பட்டால், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. 2019இல் நடந்த தேர்தலில் மொத்தமாக 52 இடங்களில் தனித்து வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், தற்போது 99 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் தொகுதிகள் முன்பைவிட வெகுவாக குறைந்துவிட்டது. உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸுக்கு பலத்தை சேர்த்துள்ளன.