வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை (ED) ஆய்வு
செய்தி முன்னோட்டம்
வேலூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனை வளாகம், அங்குள்ள மருத்துவர்களின் விடுதிகள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி ஆதாரங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை
மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் வாங்கியதாக புகார்
துப்பாக்கி ஏந்திய CRPF வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் போது வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவோ, உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய கோப்புகள், கணினித் தரவுகள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகாரையடுத்து இந்த தேடுதல் நடைபெற்றுள்ளது. கடந்த சில காலங்களாகவே கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியுதவிகள் குறித்து மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறையோ அல்லது CMC நிர்வாகமோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.