72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவரது நல்லடக்கம் செய்ய தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடல் போல் சாலை எங்கிலும் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர். மாலை 5.30 மணிக்கு மேல் கட்சி அலுவலகம் சேர்ந்த விஜயகாந்த் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரபலங்கள் பலர் அங்கு குவிந்துள்ளனர்.
குடும்ப வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது
குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. டி,ஆர்.பாலு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். இறுதி சடங்கு நடக்கும் இடம் மிகவும் குறுகிய இடம் என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பிரபலங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் இறுதி சடங்கினை காண ஏதுவாக அலுவலக வாயிலில் பெரியளவிலான எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டிருந்தது. இறுதியாக விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, விஜயகாந்த் உடல் அவரது குடும்ப வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்வதற்கு முன்னர் விஜயகாந்த் கைகளை பிடித்து கதறி அழுதார் பிரேமலதா விஜயகாந்த்.