செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. அதன் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், அவர் இன்று முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை 3000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், 5 நாட்கள் விசாரணையின் போது அமலாக்கத்துறையினர் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி கேட்டதற்கு, அவர் இல்லை என்று பதிலளித்தார். அதை தொடர்ந்து, அவரை விசாரிக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத் துறை நீதிபதியிடம் கோரியது. இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 25 வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.