சிறை வளாகத்திலேயே மது அருந்திய சிறை காவலர் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர்-வாணியம்பாடி பகுதியில் கச்சேரி சாலையில் அமைந்துள்ளது கிளை சிறைச்சாலை. இந்த கிளை சிறைச்சாலை ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவர்களுள் தலைமை காவலர் பதவியில் இருக்கும் ஜெயக்குமார் என்பவர் சிறையிலுள்ள கைதிகளை பார்க்கவரும் உறவினர்களிடம் பணம் வாங்குவதாகவும், இரவுநேரத்தில் மது வாங்கி தருமாறு தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தது. இந்நிலையில், இவர் பணியில் இருக்கும்போதே சிறை வளாகத்தில் மது அருந்தும் வீடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் ஜெயக்குமாரை, ஒருங்கிணைந்த வேலூர் சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.