சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் 'வெற்றி': 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிரடி நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 எம்.எல்.ஏ-க்களின் அமோக ஆதரவைப் பெற்று முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்தது. தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டிய மிக முக்கியமான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காலை முதலே அவையில் நிலவி வந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் பகுதிவாரியாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
அரசியல் பலம்
144 ஆதரவு ஓட்டுகளுடன் மாபெரும் வெற்றி!
வாக்கெடுப்பின் முடிவுகளைச் சபாநாயகர் அறிவித்தபோது, தவெக அரசுக்கு எதிர்பாராத அளவிற்குக் கூடுதல் பலம் கிடைத்திருந்தது உறுதியானது. ஆதரவு: 144 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்ப்பு: அதிமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகள் தரப்பில் 22 ஓட்டுகள் எதிராகப் பதிவாகின. நடுநிலை: பாமக-வின் 4 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் ஆகியோர் நடுநிலை வகித்தனர். வாக்கெடுப்பின் முடிவில், "மாண்புமிகு முதலமைச்சரின் தீர்மானம் நிறைவேறியது, தவெக அரசு வெற்றி பெற்றது" எனச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல்வர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆதரவுக்கரம்
ஆதரவுக்கரம் நீட்டிய கூட்டணிக் கட்சிகள்
வாக்கெடுப்பின் போது தவெக-விற்குப் பின்னால் தோழமைக் கட்சிகள் அரணாக நின்றன: விசிக ஆதரவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு, தவெக அரசுக்குத் தனது கட்சியின் முழு ஆதரவை அவையில் பிரகடனப்படுத்தினார். முஸ்லிம் லீக் ஆதரவு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சட்டமன்றக் குழுத் தலைவர் ஷாஜகான், முதல்வர் விஜய்யின் ஆட்சிக்குத் தனது கட்சி வலுசேர்க்கும் என அறிவித்து ஆதரவு அளித்தார். குறிப்பாக, அதிமுக-வின் ஒரு பிரிவினரின் ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு விஜய்யை மெஜாரிட்டி மார்க்கைத் தாண்ட வைத்திருக்கிறது.