சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: பக்கிங்ஹாம் கால்வாயில் அதிநவீன படகு போக்குவரத்து விரைவில்!
செய்தி முன்னோட்டம்
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் ஏற்கனவே பேருந்து, ரயில், விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அடுத்தகட்டமாக நீர்வழிப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாயை பயன்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இ-டெண்டர் கோரியுள்ளது.
வழித்தடம்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீ தடம்
இத்திட்டத்தின் கீழ் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, நகரின் மையப்பகுதியான நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான பாதையில் படகுகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் கள ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது முற்றிலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத, பேட்டரியால் இயங்கும் அதிநவீன குளிரூட்டப்பட்ட (AC) படகுகள் பயன்படுத்தப்படும்.
கேரளா மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் வாட்டர் மெட்ரோ அமைப்பை போன்று, தானியங்கி பயணச்சீட்டு வசதிகள் இதிலும் இடம்பெறவுள்ளன.