சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது. பெருநகர மக்களின் வசதிக்காகப் பொதுப் போக்குவரத்தில் பல புரட்சிகர மாற்றங்களைச் செய்ய CUMTA திட்டமிட்டு, அதற்கான பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.
பரிந்துரைகள்
முக்கியத் திட்டப் பரிந்துரைகளின் சுருக்கம்
சென்னையில் 346 புதிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 30 புதிய பேருந்து டிப்போக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் - அடையாறு மற்றும் பெருங்களத்தூர் - மாதவரம் (புறவழிச் சாலை வழியே) ஆகிய பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள். கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம், குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் நியோ மெட்ரோ (Neo Metro) சேவை அறிமுகம். எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் ஆகிய புதிய வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவை. சென்னை நகரின் மையப்பகுதிகளான தியாகராய நகர், நுங்கம்பாக்கம், நந்தனம் மற்றும் லைட் ஹவுஸ் இடையே Tram சேவை அறிமுகம்.
தொழில்நுட்பம்
மேம்பாட்டு திட்டங்கள்
சென்னை சென்ட்ரல் - கோவளம் - மாமல்லபுரம் தடத்தில் இரண்டு கட்டங்களாக வாட்டர் மெட்ரோ சேவை செயல்படுத்தப்பட உள்ளது. ஏர் டாக்ஸி (Air Taxi): எதிர்காலப் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை துறைமுகம் - பரந்தூர் - மாமல்லபுரம் மற்றும் திருப்பதியை மையமாகக் கொண்டு, மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் ஏர் டாக்ஸி (விமான டாக்ஸி) சேவை போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த விரிவானத் திட்டங்கள், சென்னையை ஒரு உலகத் தரம் வாய்ந்த, எளிதில் பயணிக்கக்கூடிய பெருநகரமாக மாற்றும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ளன.