சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமசந்திரன் இடம்பெறக்கூடாது என்றும், கல்லூரி மாணவிகளின் பிரதிநிதி, பெற்றோரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுமாறு குழுவினை மாற்றியமைக்கவேண்டும் என்று பெயர் வெளியிடவிரும்பாத ஏழு மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர். தங்கள் அடையாளங்களை வெளியிடாமல் விசாரணை நடத்தவேண்டும் என்றும், தங்கள் விவரங்களைமூடி முத்திரையிடப்பட்ட உறையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொடர்ந்து மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தவறிவிட்டதாகவும், பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மேலும் அந்த மனுவில், பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகளாகவுள்ள மாணவிகள்மீது கலாஷேத்ரா நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச்சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ராவில் கொள்கைகள் வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுவானது விசாரணைக்கு வந்தநிலையில், மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு உத்தரவுப்பிறப்பித்தார் நீதிபதி. தொடர்ந்து, நிர்வாகத்தின் பெயரை காப்பாற்றிக்கொள்ள விசாரணைக்குழுவினை ஏன் சென்னை உயர் நீதிமன்றம் அமைக்கக்கூடாது என கலாஷேத்ரா நிர்வாகம் விளக்கமளிக்கவேண்டும் என்றும், மகளிர் மாநிலஅறிக்கையினை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க கலாஷேத்ரா மற்றும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை 24ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.