இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகக் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
மழை
வடகடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
இன்று வடகடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 30-இல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 31, ஆகஸ்ட் 1-இல் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 2-இல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேவேளையில், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.