வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, பலரும் போதிய பேருந்துகள் இல்லை என கேள்விகள் எழுப்பினர். இதனையடுத்து வாரயிறுதி நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக, இன்று முதல் 18ஆம் தேதி வரை, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மொத்தமாக 750 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதில், சென்னையிலிருந்து 550 பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லையென எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த முதல்வர், கிளாம்பாக்கத்தில் இருந்த பெரிய குறைகள் சரி செய்யப்பட்டு விட்டன. சிறிய குறைகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.