பீகார் முதலமைச்சர் பதவியில் மாற்றமா? மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியா?
செய்தி முன்னோட்டம்
பீகார் அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பீகாரில் புதிய முதலமைச்சர் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள (JDU) வட்டாரங்களின்படி, நிதிஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் அவர் மார்ச் 5-ஆம் தேதி கையெழுத்திட்டு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா மற்றும் மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்து நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றம்
வாரிசு அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம்
நிதிஷ் குமார் தேசிய அரசியலுக்கு நகரும் பட்சத்தில், பீகார் முதலமைச்சர் நாற்காலியை பாஜக கைப்பற்றக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அவரும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படலாம் என்றும் JDU வட்டாரங்களில் உற்சாகம் நிலவுகிறது. இது நிதிஷ் குமார் தனது அரசியல் வாரிசை முன்னிறுத்துவதற்கான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் அரசியல் நகர்வுகளால், மார்ச் 8-ஆம் தேதி தொடங்கவிருந்த நிதிஷ் குமாரின் 'சமிருதி யாத்திரை' ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியானால், பீகார் அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த 'நிதிஷ் குமார் யுகம்' ஒரு புதிய வடிவத்தை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.