WFI தலைவர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்த பஜ்ரங் புனியா
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது எதிர்ப்பை பதிவு செய்த ஒருநாள் கழித்து, பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற்று கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு "எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பித் தருகிறேன். அதை அறிவிப்பதற்கான எனது கடிதம் இது. இது எனது அறிக்கை" என்று பஜ்ரங் புனியா தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நேற்று, சஞ்சய் சிங், வெற்றி பெற்று இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தங்கள் எதிர்ப்பின் அடையாளமாக மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக சாக்ஷி அறிவித்தார்.
பத்திரிகையாளர்களை சந்தித்து எதிர்ப்பை தெரிவித்த சாக்ஷி மாலிக்
சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மூத்த மல்யுத்த வீரர்கள், முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல புகார்களை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் WFI தேர்தல் நடைபெற்றது. அதில், குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒரு நபர், அவரது தொழில் பங்குதாரர் மற்றும் நெருங்கிய உதவியாளர் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன். இன்று முதல் நீங்கள் என்னை போட்டி மைதானத்தில் பார்க்க மாட்டீர்கள்," என்று சாக்ஷி கண்ணீர் மல்க கூறினார்.