LOADING...
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2025
06:52 pm

செய்தி முன்னோட்டம்

அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டானிலும் உணரப்பட்டன. நிலநடுக்க அறிவியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, இதன் மையப்புள்ளி அசாமின் உதல்குரி மாவட்டத்தில், பூமியின் அடியில் 5 கிமீ ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும், இதுவரை எந்தவித உயிரிழப்போ அல்லது பெரிய சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

கண்காணிப்பு

நிலைமை தொடர்ந்து கண்காணிப்பு

"இதுவரை காயங்கள் பற்றிய எந்தத் தகவலும் வரவில்லை, ஆனால், ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்ய எங்கள் குழுக்கள் தயாராக உள்ளன." என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், "உதல்குரிக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதமோ, உயிரிழப்போ இல்லை. நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்." என்று பதிவிட்டுள்ளார். அசாம் அதிக அபாயமுள்ள நில அதிர்வு மண்டலத்தில் இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.