'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தனது அறிக்கையில் அண்ணாமலை,"கடந்த திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு முதன்மைக்காரணம், அதிகார போதையில் மக்களின் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். தற்போது உங்கள் அரசும் அதே பாதையில் பயணிக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
— K.Annamalai (@annamalai_k) August 18, 2026
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற… pic.twitter.com/gaAgiDwJcB
வழக்குகள்
25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள்
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், ஆளுங்கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
"தனது குடும்பத்தை தவறாக பேசிய தவெக தொண்டருக்கு பதிலளித்த 'வீ தி லீடர்ஸ்' தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. முதலமைச்சரை மகிழ்விப்பதற்காக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு ஜனநாயக குரல்களை அடக்குவதை அனுமதிக்கக் கூடாது" எனவும் அவர் அந்த X பதிவில் தெரிவித்துள்ளார்.
வலியுறுத்தல்
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்
சமூக வலைத்தளங்களில் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம் என்றாலும், ஆளுங்கட்சியை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் கைது நடவடிக்கையால் ஒடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் என்பவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் அல்லாமல், மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான பொதுவான தலைவர் என்பதை நினைவில் கொண்டு, விமர்சனங்களுக்கு உரிய இடம் வழங்கி இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.