அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்
விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்துள்ள குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்னும் ஆசிரமம் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது. இதில் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தோர் தங்கியிருந்தனர். இங்கு தங்கியுள்ளோர் மாயமான முறையில் காணாமல் போவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உரிய சான்றிதழ்கள் எதுவுமின்றி இந்த ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு தங்கியிருந்தோர் மிக மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தில் இருந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனையிலும், பின்னர் வேறு சில காப்பகங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜன்னல் வழியே குதித்து தப்பியோட்டம்
தற்போது இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடலூரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி கடலூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சுமார் 25 மனநலம் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் 5 பேர் காப்பகத்தின் ஜன்னல் வழியே கதவினை உடைத்து போர்வையை கயிறு போல் செய்து அதன் உதவியோடு கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார்கள். இச்செய்தியினை காப்பக ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவித்தனர். தப்பியோடிய அந்த 5 பேரையும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.