Page Loader
அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

எழுதியவர் Sindhuja SM
Jun 11, 2024
04:11 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி இருக்கும் என்றும், போலவரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் நாயுடு உறுதியளித்தார். விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும் மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அமராவதி தான் நமது தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்வோம், பழிவாங்கும் அரசியலை அல்ல. விசாகப்பட்டினம் மாநிலத்தின் வணிக தலைநகராக இருக்கும். மூன்று தலைநகரங்களை உருவாக்க முயற்சிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை நாங்கள் விளையாட மாட்டோம்." என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

இந்தியா 

அமோக வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி

விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, இந்த தகவலை கூறியுள்ளார். இந்த கூட்டத்தின் போது தான் கூட்டணியின் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன சேனா கட்சித் தலைவர் கே பவன் கல்யாண் நாயுடுவின் பெயரை முன்மொழிந்தார். இதை பாஜக மாநிலத் தலைவரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியுமான டி புரந்தேஸ்வரி ஆதரித்தார். ஆந்திரப் பிரதேசத்தில் 164 சட்டமன்றம் மற்றும் 21 மக்களவைத் தொகுதிகளில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, தேசிய அரசியலில் நாயுடு ஒரு கிங்மேக்கராக உருவெடுத்தார். இந்நிலையில், அமராவதி குறித்த பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.